பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
UPDATED : ஆக 02, 2025 12:00 AM
ADDED : ஆக 02, 2025 10:57 AM
மதுரை:
மதுரையில் தனியார் பள்ளியில் மூடாமல் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தாக்கலான வழக்கில், கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை உத்தங்குடி அமுதன் தாக்கல் செய்த மனு:
மதுரை கே.கே.நகர் ஸ்ரீ கின்டர் கார்டன் மழலையர் பள்ளியில் எனது மூன்றரை வயது மகள் படித்தாள். மகளின் பள்ளி சேர்க்கை, கல்விக் கட்டணமாக ரூ.37,500 செலுத்தினேன். சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், என் மகள் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.
அனுமதி அளித்த பின்பு தொடர் ஆய்வு செய்ய அதிகாரிகள் தவறிவிட்டனர். அதிகாரிகளின் அலட்சியம், பள்ளி நிர்வாகத்தினரின் அஜாக்கிரதையே மகள் உயிரிழப்பிற்கு காரணம். மத்திய ,மாநில அரசுகள் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட ஏற்படுத்திய விதிமுறைகள், பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்தும் பண ஆதாயத்திற்காக அத்தகைய வகுப்புகளை நடத்துகின்றனர். அதனை தடுக்காத அதிகாரிகள் மீதும், பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.50 லட்சம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ். ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர், இயக்குநர், மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

