நீட் தேர்வுக்கு எதிராக எழுதிய வாசகம் அழிப்பு விசாரணை நடத்த இந்து முன்னணி வலியுறுத்தல்
நீட் தேர்வுக்கு எதிராக எழுதிய வாசகம் அழிப்பு விசாரணை நடத்த இந்து முன்னணி வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:24 AM
குன்னுார்:
குன்னுாரில், நீட் தேர்வுக்கு எதிராக சுவரில் எழுதிய வாசகங்கள் அதிகாரிகளால் அழிக்கப்பட்ட நிலையில், அதனை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை ஓர தடுப்பு சுவரில், 'இந்தியா ஒழிக; நீட் தேர்வை புறக்கணிக்க வேண்டும் என, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக வாசகம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னுாரிலும் இதுபோன்று எழுதப்பட்ட வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது
இது தொடர்பாக, அப்பர் குன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த பின், இந்து முன்னணி நீலகிரி மாவட்ட பொது செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கை:
குன்னுார் கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள, பாறை முனீஸ்வரர் கோவில் அருகே தடுப்பு சுவரில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் உடனடியாக சுண்ணாம்பு பூசி மறைத்து விட்டனர்.அமைதியான குன்னுாரில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கெடுத்து விடும்.
எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைகண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தேச துரோகிகளை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.