UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM
ADDED : ஜூன் 04, 2025 08:17 AM

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 2025-26ம் கல்வி ஆண்டின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. கால்நடை மருத்துவப்படிப்பு மட்டுமின்றி, வேலை வாய்ப்பு மிகுந்த மூன்று இளநிலை படிப்புகளையும் வழங்குகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.வி.எஸ்சி., அண்டு ஏ.எச்., - கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு - ஐந்தரை ஆண்டுகள்
பி.டெக்,,- உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு - 4 ஆண்டுகள்
பி.டெக்,,- கோழியின தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்
பி.டெக்,,- பால்வளத் தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்
கல்வித்தகுதி:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது தொழில்கல்வி பாடங்களை படித்திருக்க வேண்டும். 
தமிழக இடஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு 'நீட்' தேர்வு எழுதியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 15 சதவீத இடங்களுக்கு மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.
கல்வி நிறுவனங்கள்:
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், உடுமலை மற்றும் தேனி உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவைதவிர, சென்னையில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி, ஓசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி செயல்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை:
 https://adm.tanuvas.ac.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம். 
தமிழக இடஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர் ஆன்லைன் வாயிலாகவே பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: 
மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 
ஜூன் 20
விபரங்களுக்கு:
 www.tanuvas.ac.in

