UPDATED : பிப் 28, 2025 12:00 AM
ADDED : பிப் 28, 2025 10:32 AM
இன்றைய சூழலில் கணிதத் தாக்கம் இல்லாத எந்த அறிவியல் சிந்தனையும் இல்லை. கணிதத்தின் தாக்கத்தைக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்தான் சிறிது சிறிதாக உணரத் தொடங்கியுள்ளோம்.
கணிதம் இல்லாத அறிவியல் சிந்தனை உடலற்ற உயிருக்குச் சமம்.
ஆழமான கருத்துடைய கணிதச் சிந்தனைகளின் ஆற்றலை எல்லோராலும் அவ்வளவாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. மேலும் கணிதத்தால் அதிகப் பயன் இல்லை என்ற உணர்வும் ஏற்படுகிறது. இதனால் பலருக்கும் கணிதம் கசப்பான அனுபவத்தைத் தருகிறது.
வளைவரைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது வட்டம். இதை வளைவரைகளின் ராணி (Queen of Curves) என்கிறோம்.
வட்டம் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து ஒரே தொலைவில் அமைந்த புள்ளிகளைச் சுமந்திருக்கும் வளைவரையாக அமைகிறது. வட்ட வடிவத்தின் அற்புதச் சமச்சீர் பண்புகளைத் தொன்று தொட்டே மனிதனால் தனது உள்ளுணர்வு மூலம் அறிந்திருக்க முடிந்தது. ஒரு குறிப்பிட்ட நீளமுடைய ஒரு நுாலைக் கருதிக் கொள்வோம். அந்நுால் மூலம் சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம் போன்ற பல்வேறு வடிவங்களை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு ஏற்படுத்தும் பல்வேறு வடிவங்களின் உட்பகுதியில் அமைந்த பரப்பைக் கணக்கிட்டால், வட்ட வடிவம் கொண்ட அமைப்பே மீப்பெரு பரப்பை வழங்கும் என்பது கணித உண்மை. இப்பண்பு கணிதத்தில் 'ஒரே சுற்றளவு புதிர்' என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் கொடுத்த பரப்பில் மீச்சிறு சுற்றளவை ஏற்படுத்தக்கூடிய வடிவமாக அமைவதும் வட்டமே.
இந்த அரிய கணித உண்மையை இயற்கையும், நம் முன்னோர்களும் அறிந்திருந்தது மிக ஆச்சரியம். வட்டத்தின் இப்பண்பே அதிக அளவில் நமக்குத் தேவையானவற்றைப் பூர்த்திசெய்ய உதவுகிறது. வாழ்க்கையை ஒரு வட்டம் என்று சொல்வதுண்டு. கணிதத்தில் வட்டத்துக்கு முக்கியப்பங்கு. கணித ஆற்றலை வளர்த்துக்கொண்டால், வாழ்க்கை வட்டம் விரிவாகும். அதில் அனைத்தும் மாணவருக்கு சிறப்பாகும்.