தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் திராவிட மாடல் மாயை உடைந்து விடும்!
தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் திராவிட மாடல் மாயை உடைந்து விடும்!
UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 07:10 PM

சென்னை:
தரமான கல்வி திட்டம் தமிழக மாணவர்களுக்கு கிடைத்து விட்டால், திராவிட மாடல் எனும் மாயை உடைந்து சிதறி விடும் என்ற பயத்தில், தேசிய கல்வி கொள்கையை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார் என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.
அக்கட்சி அறிக்கை:
நிதி மறுக்கப்படுகிறது என்பதை விட, முதல்வர் ஸ்டாலின் தன் அரசியல் லாபத்திற்காக, தமிழக மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை புறக்கணிக்கிறார் என்பது தான் நிதர்சன உண்மை.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மற்ற திட்டங்களை செயல்படுத்த மறுத்துவிட்டு, அதிலிருக்கும் ஒரு திட்டத்திற்கு மொத்த நிதியை கேட்பது எந்த வகையில் சரி?
கடந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த நிதியில், எவ்வளவு செலவழிக்கப்பட்டு உள்ளது என்பதை, முதல்வரால் விளக்கி கூற முடியுமா? தமிழகத்தில் பதின்ம வயது மாணவர்கள், தமிழில் எழுத படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் காரணம் என்ன?
எளிய பின்புலம் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும், தேசிய கல்வி கொள்கை வாயிலாக, இலவசமாக பிற மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டு, அந்த வாய்ப்பை தட்டி பறிப்பது தான் ஒரு மாநில முதல்வருக்கான இலக்கணமா?
மேலும், அரசு பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் திணறுவதும், பள்ளி மாணவர்களே கழிப்பறைகளை கழுவும் அவல நிலையும், இடிந்து விழும் மேற்கூரைகளால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுவதும், முதல்வருக்கு தெரியுமா?
இவ்வாறு சீர்குலைந்துள்ள தமிழக பள்ளி கல்வி துறையால், அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் முதல்வர், அனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்கும் தேசிய கல்வி கொள்கையை கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஏன்?
எனவே, தரமான கல்வி திட்டம் தமிழக மாணவர்களுக்கு கிடைத்து விட்டால், உங்களின் திராவிட மாடல் எனும் மாயை உடைந்து சிதறி விடும் என்ற பயத்தில், தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கும் முதல்வர், தமிழக மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை இருப்பது போல் கபட நாடகம் ஆடுவதை நிறுத்த வேண்டும்.
தேசிய கல்வி கொள்கை வாயிலாக, தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.