சென்டாக்கில் விண்ணப்பித்தால் கண்டிப்பாக சீட் கிடைக்கும்
சென்டாக்கில் விண்ணப்பித்தால் கண்டிப்பாக சீட் கிடைக்கும்
UPDATED : மார் 31, 2025 12:00 AM
ADDED : மார் 31, 2025 09:22 AM
புதுச்சேரி :
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் புதுச்சேரி இந்திரா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியரும், சென்டாக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளருமான யமுனாராணி பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவில் எங்கும் இல்லாத மாணவர் சேர்க்கை சிஸ்டம் புதுச்சேரியில் உண்டு. அது தான் சென்டாக் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை அமைப்பு. மருத்துவம், இன்ஜினியரிங், கலை அறிவியல் என அனைத்திற்கும் சென்டாக்கில் ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். அரசு ஒதுக்கீடு, சுயநிதி இடங்களுக்கு எந்த படிப்புகளுக்கு வேண்டுமென்றாலும் நீங்கள் சேர்ந்து கொள்ள முடியும். www.centacpuducherry.in என்பது தான் சென்டாக்கின் அதிகாரபூர்வ இணையதள போர்ட்டல்.
இதில் புதுச்சேரியில் எந்தந்த படிப்புகள், கல்லுாரிகள் உள்ள என அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். இந்த போர்ட்டல் வழியாக விண்ணப்பித்து கல்லுாரியில் சேர்ந்து கொள்ளலாம். நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகள் மற்றும் நீட் மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை என தனித்தனியே இரண்டு விண்ணப்பம் போட வேண்டி இருக்கும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கும். பிளஸ் 2 முடித்த பையாலஜி படித்த மாணவர்கள் நீட் ரிசல்ட் வந்த பிறகு சென்டாக்கில் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.
இன்ஜினியரிங், அக்ரி, உள்பட இதர படிப்புகளுக்கு நான்-நீட் அடிப்படையில் சேர்க்கை நடக்கும். பிளஸ் 2 ரிசல்ட் வந்த நான் - நீட் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியில் 52 நான்-நீட் சேர்க்கை கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 240 படிப்புகளில் 9,740 இடங்கள் உள்ளன.
இது எல்லாமே சேர்த்து ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். இதனால் பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களுக்கும் ஏதேனும் ஒரு சீட் கண்டிப்பாக கிடைக்கும். இதுமட்டுமின்றி யூ.ஜி., பி.ஜி., மெடிக்கல் சீட்டுகளும் இதே போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம். அரசு கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடு மட்டுமின்றி என்.ஆர்.ஐ., ஓ.சி.ஐ., சுயநிதி இடங்களும் உள்ளன. சுய நிதி இடங்களில் கல்வி கட்டணம் மாறுபடும். புதுச்சேரி மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் சீட்டுகள் உண்டு. அந்த சீட்டுகளுக்கு கூட புதுச்சேரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தவிர பி.ஆர்க்., பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். பாலிடெக்னிக் முடித்துவிட்டு வரும் மாணவர்கள் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி முறையிலும் சேரலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் முன்பு சென்டாக் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது காமராஜர் மணிமண்டபத்தில் இயங்கி வருகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குறை தீர்வு மையத்தினை அணுகினால் சென்டாக் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.