UPDATED : மே 17, 2025 12:00 AM
ADDED : மே 17, 2025 01:26 PM
சென்னை:
ஜவுளித் தொழில் துறையில் வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.
சோதனை அடிப்படையில், இதற்கான கட்டமைப்பு, திருப்பூரில் ஒரு சாயப்பட்டறையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் என்ற நிலையை எட்டும் வகையில், எலக்ட்ரோகெமிக்கல் முறையில் இது செயல்படுகிறது. இந்த முறையில், 500 மில்லி லிட்டரில் துவங்கி 50 லிட்டர் வரையிலான கழிவுநீரில் இதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.
இந்த சாதனங்கள் வாயிலாக செலுத்தப்படும் நீரில் 96 சதவீத நிறம் நீக்கப்படுவதும், சாயமேற்றும் தொட்டியிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் உள்ள கரிம மற்றும் கனிம மாசுக்களை, வேதியியல் ஆக்சிஜனேற்றம் மூலம் முற்றிலும் அகற்றப்படுவதும் சோதனையில் உறுதியானது. இதையடுத்து, சோதனைக்கான திருப்பூர் ஆலையில், தினசரி 400 லிட்டர் கழிவுநீர் நீக்கப்படுகிறது.
சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர், நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன்; மனிதர்கள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றுக்கு ஆபத்து விளைவிக்கின்றன.
இதை தடுக்கும் வகையிலான இந்தோ - ஜெர்மன் அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் ஆதரவளிக்கப்படும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் சூழலில், சாயக் கழிவுநீர் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.