நேபாள கல்வி நிலையங்களுக்கு 81 பஸ்கள் வழங்கியது இந்தியா
நேபாள கல்வி நிலையங்களுக்கு 81 பஸ்கள் வழங்கியது இந்தியா
UPDATED : அக் 23, 2025 08:07 AM
ADDED : அக் 23, 2025 08:18 AM
காத்மாண்டு:
நேபாளத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியா இலவசமாக 81 பஸ்களை வழங்கியுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதேபோன்று இளைஞர்கள் நடத்திய போராட்டத்தாலும் நேபாளத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், நேபாளத்தின் 48 மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியா சார்பில், 81 பஸ்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. குறிப்பாக பேரிடரால் பாதிக்கப்பட்ட கோஷி மாகாணத்தில் உள்ள இலம், ஜாபா மற்றும் உதயபூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த உதவி, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்பின் அடையாளம். ஏழை, எளிய கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க வசதியாக இந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில், நேபாளத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இந்தியா சார்பில், 381 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.