உலக வர்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
உலக வர்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 10:04 PM
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள, தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின், இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
அதன் இயக்குனர் பழனிமுத்து வரவேற்று பேசியதாவது:
இந்த கல்வியாண்டில் உணவு பதப்படுத்தும் துறையில், 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளது. நான்கு இந்திய காப்புரிமைகளை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெற்றுள்ளது. இந்த நிறுவனமானது தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு திறன்மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 2,870 பங்கேற்பாளர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், 70 இளநிலை, 27 முதுகலை மற்றும் ஒன்பது முனைவர் பட்டங்களை, கரக்பூரின் ஐ.ஐ.டி., இயக்குனர் வீரேந்திரகுமார் திவாரி வழங்கினார்.
பின் அவர் பேசியதாவது:
இந்தியா உணவு துறையில் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, உணவு பதப்படுத்தும் தொழில் துறை, நாட்டின் மொத்த உணவு சந்தையில் 32 சதவிகிதம் பங்களிப்பு கொண்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமும், ஏற்றுமதியில் 13 சதவீதமும் மற்றும் தொழில் முதலீடுகளில் 6 சதவீதமும் பங்களிக்கிறது.
எனவே, மாணவர்கள் உணவு தொழில் துறையில் இன்றைய வளர்ச்சிக்கேற்ப ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, '3டி' பிரின்டிங் மற்றும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
விழாவில், ஐ.டி.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் மாலிக், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் சோதி ஆகியோர் பங்கேற்றனர்.