UPDATED : மே 29, 2024 12:00 AM
ADDED : மே 29, 2024 05:42 PM

ஒட்டாவா:
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் சமீபத்தில் குடியேற்ற விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டது. குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், அங்குள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் கனடாவில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்திய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த முடிவை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திரவ வடிவிலான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும் அவர்கள், அதனையும் நிறுத்தி விட்டு காலவரையற்ற முழு உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். புதிய விதிகள் காரணமாக ஏற்கனவே 50 இந்தியர்கள் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.