UPDATED : பிப் 12, 2026 10:01 PM
ADDED : பிப் 12, 2026 10:03 PM
புதுடில்லி:
ரத்து செய்யப்பட்ட பழைய தொழில் துறை சட்டங்கள் தொடர்பான விதியால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில், தொழில்துறை உறவுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தொழிற்சங்க சட்டம், தொழில் துறை வேலைவாய்ப்பு சட்டம், தொழில் துறை தகராறு சட்டம் ஆகிய மூன்று பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து, 2020ல் தொழில்துறை உறவுகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டம், கடந்த நவம்பரில் தான் அமலுக்கு வந்தது. இதில், பழைய மூன்று சட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும், அவற்றின் கீழ் ஏற்கனவே நடந்த நடவடிக்கைகள், உரிமைகள், ஒப்பந்தங்கள், வழக்குகள் போன்றவை தொடர்ந்து செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய பிரிவு 104ல் சேமிப்பு விதிகள் உள்ளன.
இதே பிரிவில் புதிய சட்டம் அமலானதும், பழைய சட்டங்கள் தானாகவே ரத்தாகிவிடும் என்பதும் உள்ளது. இதனால், எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் வரலாம் என்பதால், குழப்பத்தை தீர்க்க மசோதாவின் நோக்கத்தை விளக்கி, புதிதாக தொழில் துறை உறவுகள் திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தாக்கல் செய்தார்.

