UPDATED : பிப் 12, 2026 10:03 PM
ADDED : பிப் 12, 2026 10:05 PM

திருவனந்தபுரம்:
“டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியுள்ள குழந்தைகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்படும்,” என கேரள பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில், பள்ளி மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைப்பது மற்றும் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமரும் மாணவர்கள் குறித்து திருத்தப்பட்ட ஆய்வறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாடத்திட்ட குழு நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பாக மாநில பொதுக்கல்வித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று அளித்த பேட்டி:
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட ஆன்லைன் தொழில்நுட்பம் உலக அளவில் தீவிரமாக பரவி வருகிறது. கேரளாவில் குழந்தைகள் டிஜிட்டல் அடிமைகளாக மாறுவது அதிகரித்து வருகிறது.
எனவே, டிஜிட்டல் அடிமை குறித்து இந்த நேரத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்வது அவசியம். கல்வித் துறைக்கு அடிக்கடி வரும் புகார்கள், டிஜிட்டல் அடிமை தொடர்பான பிரச்னையை தீவிரமாகக் கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதைக் குறிக்கிறது.
எனவே, டிஜிட்டல் அடிமை குறித்து தீவிரமான ஆய்வு தேவையா என்பதை மாநில அரசு ஆய்வு செய்யும். தேவைப்பட்டால் இதற்கு என தனி சட்டம் இயற்றப்படும்.
டிஜிட்டலுக்கு அடிமையான குழந்தைகள் குறித்து ஆய்வு செய்ய பொதுக்கல்வித்துறை செயலர் வாசுகி தலைமையில் ஐந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

