உயர் கல்வி நிறுவன மசோதா பார்லி., கூட்டுக்குழு அமைப்பு
உயர் கல்வி நிறுவன மசோதா பார்லி., கூட்டுக்குழு அமைப்பு
UPDATED : பிப் 12, 2026 10:05 PM
ADDED : பிப் 12, 2026 10:08 PM

புதுடில்லி:
உயர் கல்வி நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்' மசோதாவை ஆய்வு செய்ய, பா.ஜ., எம்.பி., புரந்தேஸ்வரி தலைமையில், 31 பேர் அடங்கிய பார்லி., கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், என்.சி.டி.இ., எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் என்ற மசோதாவை மத்திய பா.ஜ., அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தலைவரின் கீழ், தர நிர்ணயம், நிதி ஒதுக்கீடு, அங்கீகாரம் போன்றவற்றுக்கு தனித்தனி குழுக்கள் இருக்கும். உயர் கல்வியின் தரம், தன்னாட்சி, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, மசோதாவை பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்தது.
இந்நிலையில், விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவை ஆய்வு செய்ய, ஆந்திராவைச் சேர்ந்த லோக்சபா பா.ஜ., எம்.பி., புரந்தேஸ்வரி தலைமையில், 31 பேர் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து, லோக்சபா செயலகம் நேற்று உத்தரவிட்டது. இதில், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேர்; லோக்சபா எம்.பி.,க்கள் 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை, தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு, காங்., எம்.பி., திக்விஜய் சிங் உள்ளிட்டோர் கூட்டுக்குழுவில் உள்னர். இந்தக் கூட்டுக்குழு மாநில அரசுகள் மற்றும் கல்வி அமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் ஆலோசனைகளை பெற்று, பரிந்துரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

