இலவச சைக்கிள் நிகழ்ச்சியில் மெக்கானிக்குகள் உடனே பழுது நீக்கியதால் மாணவியர் மகிழ்ச்சி
இலவச சைக்கிள் நிகழ்ச்சியில் மெக்கானிக்குகள் உடனே பழுது நீக்கியதால் மாணவியர் மகிழ்ச்சி
UPDATED : பிப் 13, 2026 01:10 PM
ADDED : பிப் 13, 2026 01:15 PM

திருப்பூர்:
திருப்பூரில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மெக்கானிக்குகள், உடனுக்குடன் சைக்கிளில் உள்ள பழுதுகளை நீக்கித்தந்ததால், மாணவியர் மகிழ்ச்சியடைந்தனர்.
மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் இலவச சைக்கிள், வீட்டுக்கு ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக, பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
வழங்கப்படும் இலவச சைக்கிள் காற்று இல்லாமல், சக்கரம் சுழலும் நிலையில் இல்லாமல் இருப்பதால், வீடு வரை தள்ளி செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால், பெற்றோர், சைக்கிள் பெறுவோர் வேதனை அடைந்தனர். சமீபத்தில் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வழங்கிய சைக்கிள் தரமில்லாமல் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
நேற்று, திருப்பூர், ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ் பங்கேற்று சைக்கிள் வழங்கினார்.
துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் திவாகரன் சைக்கிள் வழங்கினர். சைக்கிளில் பழுதுகளை சரிசெய்ய எட்டு மெக்கானிக்குகள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
பள்ளி வளாகத்தில் சைக்கிள் பெற்ற மாணவியரிடம், 'சைக்கிளை முழுமையாக சோதனை செய்து கொள்ளுங்கள். டயரில் காற்று குறைவாக இருந்தால், காற்று நிரப்ப 'கம்ப்ரஸர்' வசதி செய்யப்பட்டுள்ளது.
சைக்கிள் நல்ல நிலையில் உள்ளதை பரிசோதித்து எடுத்துச் செல்லுங்கள். பழுதுகள் இருந்தால், எட்டு மெக்கானிக்குகள் உள்ளனர்; அவர்களிடம், சரி செய்து அதன் பின்னர் உங்கள் சைக்கிள்களை எடுத்துச் செல்லுங்கள்,' என ஆசிரியர்கள் அறிவுறுத்தினார்.

