ஆசிரியர் கலந்தாய்வில் குளறுபடி; உதவி இயக்குநர் இடமாற்றம்
ஆசிரியர் கலந்தாய்வில் குளறுபடி; உதவி இயக்குநர் இடமாற்றம்
UPDATED : ஜூன் 25, 2026 09:25 PM
ADDED : ஜூன் 25, 2026 09:26 PM
சென்னை:
ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில், 100 ஆசிரியர்கள் பங்கேற்பதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குளறுபடிக்கு காரணமானவர் எனக் கூறி, உதவி இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 16ல் துவங்கி, 18ல் நிறைவடைந்தது.
இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெறும் நோக்கில், சிலருக்காக நிபந்தனைகளை தளர்த்தி உள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் நேரடி நியமனங்கள் வாயிலாக, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு, 81 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 100 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளில், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னரே, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நடந்து முடிந்த பொது மாறுதல் கலந்தாய்வில், புதிதாக பணியில் சேர்ந்த 100 ஆசிரியர்களும், பங்கேற்கும் வகையில், நிபந்தனைகள் திருத்தப்பட்டதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விசாரணை
இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்தில், கல்வி பிரிவில் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆதிமூலம், கடலுார் மண்டல உதவி இயக்குநராக, நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
அப்பதவியில் இருந்த சுப்பிரமணியன், இயக்குநரகத்தில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஆதிதிராவிடர் நல இயக்குநர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார்.
அதில், கலந்தாய்வில் ஏற்பட்ட இடையூறு காரணமாகவும், நிர்வாக நலன் கருதியும், ஆதிமூலம் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
