UPDATED : ஜூலை 02, 2026 11:18 AM
ADDED : ஜூலை 02, 2026 11:19 AM
புதுடில்லி:
குஜராத் மாநிலம் ஆனந்தில் நடந்த தேர்வு முறைகேட்டில், IELTSக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று அந்த தேர்வை நடத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாடு சென்று படிக்கவும், வேலை செய்யவும், விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதும் ஆங்கிலப் புலமையை அறியும் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பேர் இத்தகைய தேர்வுகளை எழுதுகின்றனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் இந்த தேர்வை ஆள் மாறாட்டம் செய்து எழுதிய கும்பலை போலீசார் கண்டுபிடித்ததாகவும், ஒருவனை கைது செய்த போலீசார், இரண்டு பேரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரத்தில் IELTSக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த தேர்வுக்கான துணை உரிமையாளர் மற்றும் நிர்வாகம் செய்யும் ஐ.டி.பி., எஜூகேசன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விவகாரத்தில் IELTSக்கு எந்த விதமான தொடர்புமில்லை. இச்சம்பவத்தை IELTS உடன் தொடர்புபடுத்தும் எந்தவொரு செய்தியும் உண்மைக்கு மாறானது” எனத் தெரிவித்துள்ளது.
