மண்டல அளவிலான தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு அழைப்பு
மண்டல அளவிலான தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு அழைப்பு
UPDATED : பிப் 05, 2026 12:45 PM
ADDED : பிப் 05, 2026 12:52 PM
உடுமலை: வேலைவாய்ப்புத்துறை சார்பில், கோவை மண்டல அளவிலான தொழிற்பழகுனர் பயிற்சி முகாம், வரும் 12ம் தேதி, தாராபுரம் ஐ.டி.ஐ., வளாகத்தில் நடக்கிறது.
திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மண்டல அளவிலான பயிற்சி முகாம், வரும் 12ம் தேதி, 10:00 மணி முதல் மாலை, 05:00 மணி வரை நடக்கிறது.
இம்முகாமில், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களிலுள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களுக்கு, தொழிற்பழகுனர் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதில், பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. தொழிற்பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும்.
அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில், தொழிற்பயிற்சி பெற்றவர்கள் மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி பெற விருப்பமுள்ள, 8ம் வகுப்பு, 10, 11, 12 மற்றும் பட்டப்படிப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன், திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து இம்முகாமில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.
மேலும், விபரங்களுக்கு, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருப்பூர் மற்றும் 94990 55695; 99434 44279; 7022045795 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

