நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான திறன் இயக்க பயிற்சி தொடர உத்தரவு
நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான திறன் இயக்க பயிற்சி தொடர உத்தரவு
UPDATED : பிப் 05, 2026 12:52 PM
ADDED : பிப் 05, 2026 12:54 PM
திருப்பூர்: மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத்திறனை மேம்படுத்த திறன் இயக்கப் பயிற்சி அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2025 ஜூலையில் துவங்கிய இப்பயிற்சி மூலம் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர் அடிப்படை கற்றல் விளைவில் மாற்றங்கள் தெரிய வந்துள்ளது; பலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க கூடுதல் கால அவகாசம் தேவையாக இருப்பதால், முழு ஆண்டுத் தேர்வு (ஏப்ரல்) வரை திறன் இயக்கபயிற்சி நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் மூலம் முதன்மைக் கல்வி அலுவலர், கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் திறன் மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும்; முழு ஆண்டுத் தேர்வின் போது தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்குடன் கூடிய திறன் பயிற்சி புத்தகம் சார்ந்த தனி வினாத்தாள் வழங்க வேண்டும்.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாமல் திறன் இயக்க பயிற்சிக்கான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்” என, கூறப்பட்டுள்ளது.

