காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் தகவல்
காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் தகவல்
UPDATED : பிப் 05, 2026 12:54 PM
ADDED : பிப் 05, 2026 12:58 PM
ஊட்டி: ஊட்டி முத்தோரை பாலாடா ஏகலைவா உண்டு உறையிட பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணதாசன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: காலநிலை மாற்றம் குறித்து சமீபத்தில் வெளிடப்பட்ட அறிக்கைபடி, பூமியின் சராசரி வெப்பநிலை, 2025ம் ஆண்டில், 1.47 டிகிரி சென்டிகிரேட் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் பூமியின் வெப்பநிலை, 1.5 டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, உலக நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த ஆண்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இயல்பை விட, இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த, 10 ஆண்டுகளில், இந்தியாவில் வெப்பநிலை, 0.9 டிகிரி சென்டிகிரேட் அதிகரித்துள்ளது. 5 முதல், 10 நாட்கள் அதிகரித்துள்ளது.
நாட்டின் விவசாயம், தென்மேற்கு பருவ மழையை சார்ந்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக, மழை அளவு மாறி மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலின் வெப்பம், 10 ஆண்டுகளில், 0.12 டிகிரி சென்டிகிரேட் வரை உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து, மனித சமுதாயம் எவ்வித அக்கறை எடுத்துக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.
மாணவர்கள், தங்களது வருங்காலத்தை சீரழிக்கும் காலநிலை மாற்றம் குறித்து, குறைந்தபட்சம் சிந்திக்கவாவது வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியை ரம்யா வரவேற்றார். ஆசிரியை ரம்யா ஸ்ரீ நன்றி கூறினார்.

