UPDATED : ஜூலை 16, 2011 12:00 AM
ADDED : ஜூலை 16, 2011 10:41 AM
முதல் கட்ட கலந்தாய்வில் மருத்துவ படிப்பில் சேர்ந்து சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்களின் 4 பேர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளதால் மருத்துவப் படிப்பில் 4 இடங்கள் காலியாகியுள்ளன.
இதில்லாமல் வரும் 22ம் தேதியன்று மருத்துவ பரிசோதனை-சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அவரவர் சேர்க்கை பெற்ற கல்லூரிக்கு செல்ல வேண்டும். அன்றைய தினம் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் யாராவது செல்லாமல் இருந்தால், அன்றைய தினம் மாலைக்குள் அந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுவிடும்.
இதையடுத்து அரசு மருத்துவ காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 650க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பற்றிய அட்டவணையை ஜுலை 23ம் தேதி வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
அதன்பின்னர், மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெறும்.
எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் வகுப்புவாரியாக 199 முதல் 195 வரை எடுத்துள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு அட்டவணைக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் சேர்க்கை பெற்றவர்கள் திருப்தி
மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற ஆர்வத்துடன் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்காக காத்திருக்கும் மாணவர்கள், பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை கடிதம் பெற்றுவிட்டனர். இவர்களில் சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்களை ஜுலை 25ம் தேதிக்குள் கட்டணத்தை கட்டுமாறு பல பொறியியல் கல்லூரிகள் வற்புறுத்தி வருகின்றன.
எனவே, ஜுலை 23ம் தேதியன்று மருத்துவ காலியிட அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டால், தங்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைக்குமா என்று தெரிந்து கொண்டு பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தலாம். அல்லது தவிர்த்துவிடலாம் என்று மாணவர்களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
