UPDATED : ஜூலை 21, 2011 12:00 AM
ADDED : ஜூலை 21, 2011 04:15 PM
ஆஸ்ட்ரேலியாவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அங்கு உள்ள இந்திய மாணவர்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆஸ்ட்ரேலியாவில் வெளிநாட்டு மாணவர்கள் என்றால் அதில் இந்திய மாணவர்களே அதிகமாக இருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது கடுமையாக தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இது குறித்த ஆய்வை மேற்கொண்டது. வெளிநாட்டு மாணவர்களிடம், -இதில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் அடங்குவர் - ஆஸ்ட்ரேலியாவில் கல்வி பற்றி கேட்டதற்கு, 56 சதவீத மாணவர்கள் நல்லத் தரமானதாக உள்ளது என்றும், 10 சதவீதததினர் படுமோசம் என்றும், 27 சதவீத மாணவர்கள் சுமார் என்றும் கூறியுள்ளனர்.
ஆஸ்ட்ரேலியா என்றதும் என்ன வார்த்தை நினைவிற்கு வரும் என்று கேட்டதற்கு முதல் வார்த்தையாக கங்காரு என்றும், இரண்டாவதாக தாக்குதல் என்றும் பதில் அளித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வாழ்க்கைத் தரத்திற்கு அடுத்தபடியாகவே ஆஸ்ட்ரேலியா இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
வாழ்க்கை முறையில் 85 விழுக்காட்டினர் அமெரிக்காவிற்கும், 81 விழுக்காட்டினர் பிரிட்டனுக்கும், 49 விழுக்காட்டினர் மட்டுமே ஆஸ்ட்ரேலியாவிற்கும் வாக்களித்துள்ளனர்.
