UPDATED : ஆக 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலையில் மாணவர் சேவை மையம் ஆகஸ்ட் 28ம் தேதி துவக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தேவையான அத்தனை சேவைகளும் பல்கலை வளாகத்திற்குள்ளேயே வழங்கப்படுகின்றன. இதனால், நகரத்திற்கு செல்லும் நேரம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படுகிறது.
இதைக்கருத்தில் கொண்டு, கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வங்கி, தபால் அலுவலகம், தொலைபேசி, பயண சேவை மற்றும் சிகை அலங்கார வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.
கோவை கலெக்டர் பழனிக்குமார், மாணவர் சேவை மையத்தில் உள்ள வங்கி சேவையை காலை 11.00 மணிக்கு துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து தலைமை வன இலாகா அதிகாரி கண்ணன் தபால் சேவையையும், டி.ஐ.ஜி., சீமா அகர்வால் மகளிர் சேவை மையத்தையும், தூர்தர்சன் தொலைக்காட்சி இயக்குனர் அனந்தநாராயணன் வீடியோ, ஸ்டூடியோ சேவையையும், கோவை விமான நிலைய இயக்குனர் ஹேமலதா பயண சேவை மையத்தையும் துவக்கி வைக்கிறார்.
பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறுகையில், “ ஒரே வளாகத்தில் அனைத்து மாணவர் சேவை மையங்களையும் கொண்டுள்ள பெருமை பாரதியார் பல்கலைக்கு கிடைத்துள்ளது,” என்றார்.

