UPDATED : ஆக 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: காலை மற்றும் இரவு நேரத்தில் பற்களை துலக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவும், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகவும், கோவையில் ஆறாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் பற்களை துலக்கி ‘லிம்கா’ சாதனைக்கு முயற்சித்தனர்.
பெப்சோடென்ட் பேஸ்ட் தயாரிக்கும், இந்துஸ்தான் யுனிலீவர் லிமிட்டெட் நிறுவனம், இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பீளமேடு கொடிசியா வணிக வளாகத்தில் நடந்த இச்சாதனை நிகழ்ச்சியில் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன பொதுமேலாளர் பிரியா நாயர் பேசியதாவது:
பற்களை பேணி பாதுகாப்பது மற்றும் வாயை சுத்தமாக வைத்திருப்பது, இரவு நேரத்தில் பற்களை துலக்கி அதன்பின் தூங்குவது போன்ற ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் முயற்சி இது.
நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே கற்றுத்தரும் நோக்கத்துடன் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளோம். உடல் ஆரோக்கியமும், வாய் மற்றும் பற்களின் சுகாதாரமும் மிக முக்கியம், இந்தியாவில் தமிழ்நாட்டில் தான், மிக அதிகமானவர்கள் பல் சம்பந்தமான வியாதிகளால், பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சென்னை நகரில் 5 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட 600 சிறுவர்களை பரிசோதித்ததில் 80 சதவீதம் சிறுவர்கள் பற்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு இரவில் பல் துலக்குவதிலுள்ள நன்மைகளை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, பிரியா நாயர் பேசினார்.
இதையடுத்து கோவையிலுள்ள ஆறு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 362 மாணவ மாணவிகள், ஒரே சமயத்தில், தொடர்ந்து அரை மணி நேரம் பல் துலக்கி, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க முயற்சித்தனர். இவர்களுக்கு பெப்சோடென்ட் பேஸ்ட் மற்றும் பிரஷ் வழங்கப்பட்டது.

