UPDATED : செப் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பணி வரன்முறை ஆணை ரத்து செய்யப்பட்ட 211 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆணை வழங்குவது உட்பட முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி உறுதி அளித்துள்ளார்.
நிர்வாக காரணங்களால், பணி வரன்முறை ஆணை ரத்து செய்யப்பட்ட 211 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆணை வழங்க வேண்டும், பல்வேறு வகையான ஆசிரியர்கள் பெற்று வரும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகைகளை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், தொகுப்பூதிய காலத்தை முழுமையாக கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலர் ஜனார்த்தனன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பின், ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கையில், ‘பணி வரன்முறை ஆணை ரத்து செய்யப்பட்டுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆணை வழங்குவது உட்பட முக்கிய கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக இயக்குனர் உறுதி அளித்துள்ளார். அதனால், ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
