மூன்று புதிய படிப்புகள் துவக்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு
மூன்று புதிய படிப்புகள் துவக்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு
UPDATED : செப் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தின் சார்பில், இரண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு மற்றும் ஒரு டிப்ளமோ படிப்பு, 2009ம் ஆண்டு ஜனவரி முதல் புதிதாகத் துவக்கப்படுகிறது,” என பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் செப்., 16ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் ஒரு வருட ‘ஏர் ஹோஸ்டஸ், ஏவியேஷன் ஹாஸ்பிடாலிட்டி’ - டிப்ளமோ படிப்பு, ‘என்டர்பிரைசிங் கம்ப்யூட்டிங்,’ ‘ரிமோட் இன்ப்ராஸ்டிரக்சர் மேனேஜ்மென்ட்’ ஆகிய இரண்டு முதுநிலை டிப்ளமோ படிப்புகள் துவங்கப்படுகின்றன.
இப்படிப்புகள் 2009ம் ஆண்டு ஜனவரியில் துவக்கப்படும். இணைய பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம் ஆப்ரிக்க நாடுகளின் மாணவர்களுக்கு, ‘பயோ டெக்னாலஜி, புட் டெக்னாலஜி’ ஆகிய படிப்புகளை முதற்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் திராவிட இயக்க மையத்திற்கு தமிழக அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாய் நிதியுடன், பல்கலைக்கழகத்தின் சார்பில் இரண்டு கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம், மெரீனா வளாகங்களுக்கு சென்னை குடிநீர் வாரிய இணைப்பு பெறப்பட்டுள்ளது. மேலும், சென்னைப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டு 150 ஆண்டுகளான பிறகு, முதல்முறையாக கழிவுநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு மையம் துவக்கப்படுகிறது. இசைத்துறை சார்பில் வெளிநாட்டு மாணவர்களுக்காக ஆறு மாத கர்நாடக இசை சான்றிதழ்ப் படிப்பு வழங்கப்படுகிறது.
ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த சான்றிதழ்ப் படிப்புடன், எம்.ஏ., இசைப் படிப்பு பயிலவும், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த சான்றிதழ்ப் படிப்புடன் பி.எச்டி., பயிலவும் முடியும்.
இப்படிப்பு, ‘இ-லேர்னிங்’ முறையில் வழங்கப்படவுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.எல்., படித்து ஏதாவது பாடத்தில் இன்னும் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு நவம்பர் வரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இது 2009ம் ஆண்டு ஏப்ரல் வரை, மேலும் ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.
