UPDATED : ஜன 30, 2012 12:00 AM
ADDED : ஜன 30, 2012 10:06 AM
கிராமப்புற மாணவர்கள் நாட்டுக்கு பெரிதும் பயன்பட, திறமையாக செயல்பட வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
அந்தியூர் ஆதர்ஷ் கல்வி நிறுவன ஆண்டு விழாவில், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
மாணவ, மாணவியர்கள் பள்ளி பருவத்தில் தன்னம்பிக்கை, செயல்திறன், விடாமுயற்சி, ஒழுக்கம், உறுதியுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர்களின் கனவுகள் நனவாக்கி பெருமை சேர்க்க முடியும்.
குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் பங்கு நாட்டுக்கு பெரிதும் பயன்பட வேண்டும். இதற்காக, மாணவ, மாணவியர் எதிர்கால வாழ்க்கைக்காக திறம்பட செயல்பட வேண்டும். மருத்துவர்கள், பொறியாளர்களை உருவாக்கிய இப்பள்ளி வரும் காலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகும் மாணவர்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
2011ம் கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல் படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்க்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஆதர்ஷ் கல்வி நிறுவனர் சிவலிங்கம் வரவேற்றார். தாளாளர் செல்வமணி குத்து விளக்கேற்றினார். நிர்வாக அலுவலர் நாட்ராயன் முன்னிலை வகித்தார்.
மெட்ரிக் பள்ளி முதல்வர் கலைச்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாச்சலம், ரமணிதரன், சி.ஈ.ஓ., ராஜராஜன் ஆகியோர் பேசினர். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
