UPDATED : செப் 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மிகச்சிறப்பாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற
கட்டாயம்தான் அவர்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்தி, பயத்தை தோற்றுவிக்கிறது. இந்த பயம் தேவையற்றது.
தேர்வுக்கு முன்னதாகவே தயார்படுத்த துவங்கினால் உங்களுக்கு கூடுதல் நேரம் இருக்கும். தேர்வு வரும் வரை காத்திருந்து தயாராகத் தொடங்கும்போதுதான், அச்சம் நம்மை துரத்துகிறது.
ஒவ்வொரு வகுப்புக்குப் பின்னரும், அதுவரை முடிந்த பாடங்களை தேர்வுக்கு தயாரான நிலையில் படித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து படித்து வருவதால் பாடத்துடன் உங்களுக்கு பரிச்சயம் ஏற்படும். ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது. தேர்வுக்கு தயாராவதும் மிக எளிது.
உங்கள் படிப்புக்கு தேவையான அத்தனை புத்தகங்களையும் முறைப்படுத்தி, தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு தயார் செய்ய அது மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு வகுப்பை தவறவிட்டிருந்தால் உங்கள் நண்பர்களிடம் கேட்டு அந்த பாடத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கல் விஷயங்கள் பரவி வருவதால் அதற்கேற்ப தேர்வுக்கு தயாராகும் முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படாமல் இல்லை. தற்போது ஆன்லைனில் தேர்வுக்கு தயாராகும் முறை பரவலாக அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுகாக இருக்கட்டும், சட்டம் மற்றும் பிற உயர்கல்விக்காக இருக்கட்டும் ஆன்லைன் வழியாக தயாராகும் முறை அதிகரித்து வருகிறது. இது நகர்ப்புற மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தேர்வுக்கு தயாராகும் போது, நீங்கள் திட்டமிட்டுக் கொள்வதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.
எவ்வளவு நீங்கள் படிக்க வேண்டும்?
அந்த பாடம் எவ்வளவு கடினமானது?
எவ்வளவு நேரம் உங்களிடம் இருக்கிறது?
படிக்கும் காலத்தில் வேறு ஏதாவது உங்களுக்கு முக்கிய பணிகள் உள்ளனவா?
நீங்கள் எழுதப் போகும் தேர்வு முக்கியமானதா?
நீங்கள் எழுதப் போகும் தேர்வில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும்.
எந்த பாடத்தை எப்போது படிக்க வேண்டும் என்பதற்காக திட்டம் வகுத்து அதற்குரிய பாடங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பாடங்களை திருப்புதலுக்கு முன்பாக, அரைகுறையாக படித்திருந்த பாடங்களை நீங்கள் படித்து முடித்த பின்னர்தான் திருப்புதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விட்ட பாடம் கடைசி வரை தொடரும். அது மனதில் ஓர் உறுத்தலாகவே தொடர்ந்து வரும்.
எல்லா பாடங்களையும் இருக்கிற நேரத்தில் முழுமையாக படிக்க முடியாது என்று தெரிந்தால், அதி முக்கிய பாடங்களை மட்டும் முதலில் நீங்கள் படித்து முடிக்க வேண்டும். நீங்கள் எழுதப் போகும் தேர்வுக்கு நேரடியாக பயிற்சி தர மையங்கள் இருந்தால் அதன் வழியே படிப்பது நல்லது. ஆன்லைன் பயிற்சியை மட்டும் எப்போதும் நம்பி இருக்க முடியாது.
உண்மையில் குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களால் முழுமையாக பாடங்களை படிக்க முடியுமா என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து பாடங்களை படிக்கத் தொடங்குவதன் மூலம் நீங்கள் நிறைய படிக்க முடியும். நீண்ட நேரம் படித்து கொண்டே இருப்பதை தவிர்த்து விடுங்கள்.
ஒரே பாடத்தையோ அல்லது பகுதியையோ படித்துக் கொண்டிருக்கும் படி உங்கள் நேரத்தை திட்டமிடாமல் வெவ்வேறு பாடங்களை படிக்கும் படியாக திட்டமிட்டுக் கொண்டால் உங்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும்.
எந்த இடத்தில் படித்தால் யாருடைய தொந்தரவும் இல்லாமல் நன்றாக படிப்பீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். குழுவாக படிப்பது நல்லது. அப்படியானால் உங்கள் நேரம் வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் படித்த பகுதியை சுருக்கி வைத்துக் கொள்ளுவது வெற்றிக்கு உதவும். வகுப்பில் நடத்திய பகுதிகளையும் இவ்வாறு சுருக்கி எழுதி வைத்துக் கொள்ளலாம். இதை எழுதும்போதே உங்களுடைய கவனம் அந்த பாடத்தில் இருக்கும். அது தேர்வுக்கு உதவும். முக்கியமான வார்த்தைகளுக்கு நீங்கள் முழுமையாக புரிந்து வைத்திருக்கிறீர்களா என் பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்விகள் எவ்வாறு கேட்கப்படும் என்பதையும் யூகித்துக்கொள்ளுங்கள். பழைய கேள்வித்தாள்களை பாருங்கள். தேர்வுக்கு செல்லும் போது நல்ல மனநிலை மற்றும் உடல் நிலை அவசியம்.
நன்றாக சாப்பிடுங்கள், இரவில் நன்றாக தூங்குங்கள். தேர்வு தொடர்பாக சாதகமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நமது அறிவுத்திறனை குறிப்பிட்ட நேரத்தில் சவாலாக வெளிப்படுத்த வேண்டும். அதுதான் தேர்வு. அதை செய்துவிட்டால் வெற்றிக்கனி உங்கள் கையில்தான்.
