பி.பி.ஓ., நிறுவன ‘ஷிப்ட்’ விபரீதம்: 23 வயது இளைஞருக்கு மாரடைப்பு
பி.பி.ஓ., நிறுவன ‘ஷிப்ட்’ விபரீதம்: 23 வயது இளைஞருக்கு மாரடைப்பு
UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மும்பை: ‘பி.பி.ஓ., நிறுவனத்தில் வெளிநாட்டு நேரத்திற்கேற்ப பணி புரிந்த 23 வயது இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மும்பையைச் சேர்ந்த பிரசாந்த் ஒரு ஆண்டுக்கு முன், பி.பி.ஓ., நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் வேலை நேரம், ஆஸ்திரேலிய நேரத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.
இதில், பிரசாந்த் அதிகாலை மூன்று மணிக்கு துவங்கி, ஏழு மணி நேரம் பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது.
அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரசாந்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறினார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனைகளில் பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
வழக்கத்திற்கு மாறான நேரத்தில் பணியாற்றியது பிரசாந்துக்கு மன அழுத்தத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இதயம் வழக்கம்போல் செயல்படவில்லை. இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது.
பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இதுபோன்ற பிரச்னைகள் வரும். ஆனால், தற்போது 20 வயது இளைஞர்களுக்கே இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவது கவலை அளிக்கிறது.
வழக்கத்திற்கு மாறான நேரத்தில் பணிபுரிவதும், நாகரிகம் என்ற போர்வையில் உடல் நலத்திற்கு ஒத்துவராத உணவுகளை சாப்பிடுவதுமே இதற்கு முக்கிய காரணம். இந்த விஷயத்தில் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
