மாணவியை மிரட்டியதாக ஐந்து பேராசிரியைகள் மீது வழக்கு
மாணவியை மிரட்டியதாக ஐந்து பேராசிரியைகள் மீது வழக்கு
UPDATED : செப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடலூர்: கல்லூரி மாணவியை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டிய புகார் தொடர்பாக, பேராசிரியைகள் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரியும், கல்லூரி முதல்வரை பணி நீக்கம் செய்யக் கோரியும், மாணவிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறி, கல்லூரி முதல்வர் வள்ளி, பெற்றோர் கூட்டத்தைக் கூட்டி பேசினார். இதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து, 22ம் தேதி வகுப்புகளை புறக்கணித்தனர்.
அப்போது கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு மாணவி ஷஹானாஸ் பேகம், வகுப்பறையில் தனியாக படித்துக் கொண்டிருந்தார். அனைத்து மாணவிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொது, ஷஹானாஸ் பேகம் மட்டும் வகுப்பறையில் இருந்ததால், கல்லூரி பேராசிரியைகள் அவரை மொபைல் போனில் படம் எடுத்தனர்.
இதனால் அச்சமடைந்த ஷஹானாஸ் பேகம் பெற்றோரிடம் கூறி, போலீசில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் மாணவியின் தந்தை புகார் செய்தார்.
மாணவியின் புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டதையடுத்து, ஐந்து பேராசிரியைகள் மீது 341 ( முறையற்ற விதத்தில் தடுத்தல்), 509 (அவதூறாக பேசி அவமானப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
