UPDATED : செப் 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, ஒரு போதும் தவறான தகவல் தரக்கூடாது,” என, கோவை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி பாலமுருகன் பேசினார்.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறை சார்பில் ‘ கிளஸ்டர்ஸ் 08’, தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
இதில், கோவை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி பாலமுருகன் பேசியதாவது:
ஒரு பாஸ்போர்ட்டின் எண் கிடைத்தால், அதனுடைய உண்மைத் தன்மையை உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம்.
இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களிலும் இந்திய பாஸ்போர்ட் பெற முடியும். தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம், பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் விரைந்து வழங்க ‘ பாஸ்போர்ட் சேவா’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின் மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும். இன்றைய சூழலில் புதிய பாஸ்போர்ட் பெறும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, தவறான தகவல்களை ஒரு போதும் தரக்கூடாது. ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்போருக்கு, மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாலமுருகன் பேசினார்.
இக்கருத்தரங்கில் கோவை ஜீவன் இன்போடெக் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் சண்முக சுந்தரம், கல்லூரி முதல்வர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
