அரசு பள்ளி ஆசிரியர்கள் அலட்சியம் பொது இடத்தில் சுற்றும் மாணவர்கள்
அரசு பள்ளி ஆசிரியர்கள் அலட்சியம் பொது இடத்தில் சுற்றும் மாணவர்கள்
UPDATED : ஜன 28, 2013 12:00 AM
ADDED : ஜன 28, 2013 07:54 AM
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரத்தில் அரசு ஆண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவு ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பாடம் எடுக்கின்றனர். மற்ற ஆசிரியர்கள் இருந்தும் பணியை புறக்கணித்து, வகுப்பு எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால், வகுப்பு நேரங்களில் மாணவர்கள் நகரத்திலுள்ள காந்தி பூங்கா, பஸ் ஸ்டாண்ட், டீக்கடைகள், ரோட்டோரம் சைக்கிள்களில், அமர்ந்து அரட்டையடித்து பொழுதை கழிக்கின்றனர். இதை பள்ளியின் தலைமையாசிரியரும் கண்டுகொள்வது இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், அரசு ஆண்கள் பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றனரா?, இல்லையா?, என்பதை தினமும் பெற்றோர் அறியும் வகையில், குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பும் ஒரு சாப்ட்வேர் இணைந்த கம்ப்யூட்டரை பள்ளிக்கு இலவசமாக வழங்கியும், அதை இயக்க பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மயில்வாகனம் ஒரு நபரை நியமித்தும், தலைமையாசிரியர் அதனை முறையாக அமல்படுத்தவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இப்பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 1 மாணவர் ஒருவரின் தந்தை ராஜேந்திரன் கூறுகையில், "என் மகன் கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 433 மதிப்பெண் பெற்றார். ஆனால், மேற்கொண்டு தனியார் பள்ளியில் படிக்க வைக்க என்னிடம் வசதி இல்லை. அதனால், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தேன்.
ஆனால் பள்ளி துவங்கிய நாள் முதல் வகுப்புக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் செய்யவேண்டியிருப்பதால் தான், ப்ளஸ் 1 வகுப்பு எடுக்க முடியவில்லை என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனால், ப்ளஸ் 1 மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கவுன்சிலர் ராஜேந்திரன் கூறுகையில், "பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் ஊர் சுற்றுவதால், திசை மாறி செல்ல வாய்ப்புள்ளது. அதனால், மாணவர்கள் மீது அக்கறை செலுத்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முன்வரவேண்டும்" என்றார்.
அரசு பள்ளியின் அவல நிலையால், படிப்பு வீணாகிறது என்பது மட்டுமின்றி, வகுப்பு நேரங்களில் மாணவர்களை வெளியே செல்ல விடுவதால், ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்பு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
