தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது"

"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது"

"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது"


UPDATED : பிப் 01, 2013 12:00 AM

ADDED : பிப் 01, 2013 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2013 12:00 AM ADDED : பிப் 01, 2013 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி மாவட்டம், சுப்பானூர் இந்து நடுநிலை பள்ளி, குலசேகரம்பட்டி பொன்னுச்சாமி துவக்க பள்ளி, புதுக்குடி முருகா துவக்க பள்ளி, சொக்கம்பட்டி ஹரிஜன் துவக்க பள்ளி செயலர்கள் தாக்கல் செய்த மனுக்கள்:

எங்கள் பள்ளிகளில், 2011-12ம் கல்வியாண்டில், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்தோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என, தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதாக, துவக்கக் கல்வி அலுவலர் தெரிவித்தார். இதை, கல்வியாண்டு துவங்கும் முன்பே தெரிவித்திருக்க வேண்டும். தாமதமாக தகவல் தெரிவித்தனர். அரசின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் ஒரு சுற்றறிக்கையில், "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பணி நியமனம் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முதலில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். மாவட்ட பதிவு மூப்பின்படி பணி நியமனம் கூடாது; மாநில பதிவு மூப்பின்படி நியமிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், "தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைத் தான், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" என, நிபந்தனை விதித்துள்ளது. மாணவர்களுக்கு கட்டாயக் கல்வி அவசியம். அதைவிட, தரமான கல்வி அவசியம். பதிவு மூப்பு அடிப்படையில், தகுதியான ஆசிரியர்களை நியமிக்க முடியாது.

சுப்ரீம் கோர்ட், "தரமான கல்வியை வழங்க முடியாத, அரசு உதவி பெறும் பள்ளிகளை களையெடுக்க வேண்டும்" என, அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஜூன், 1ல், கல்வியாண்டு துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வு, 2012 ஜூலை, 12ல் நடந்துள்ளது. அதையே காரணமாகக் கொண்டு, தகுதி இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. ஒரு, "வெப்சைட்"டில், "தமிழகத்தில், 685 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன; அவற்றில், 73 ஆயிரம் பேர் படிக்கின்றனர்" என, தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, லட்கணக்கானோர் படித்து, வேலையின்றி காத்திருக்கின்றனர். இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித்தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், 7.14 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இதில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டம் பெற்றிருந்தால் மட்டும், அவரை பணியில் அமர்த்த முடியாது. தகுதியானவர்களை, வேலையில் நியமிக்க வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us