UPDATED : பிப் 02, 2013 12:00 AM
ADDED : பிப் 02, 2013 08:32 AM
சேலம், கொண்டலாம்பட்டி, ரவுண்டானா பகுதியில் அரசு உதவிப்பெறும் சவுடேஸ்வரி கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான அரசின் இலவச லேப்டாப், சமீபத்தில், மொத்தமாக சப்ளை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கல்லூரி தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த, மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர், வகுப்பு முடிய இன்னும், 40 நாட்களே உள்ள நிலையில், தங்களுக்கு, இலவச லேப்டாப் வழங்காமல், இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு எப்படி வழங்கலாம் என, பிரச்னை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, நேற்று காலை, 9.30 மணியளவில், கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து, கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு, கல்லூரி முதல்வர் சிங்காரம், "இலவச லேப்-டாப்களை அரசு சப்ளை செய்தால் வழங்க தயாராக உள்ளோம். அரசு வழங்காத பட்சத்தில் நான் என்ன செய்ய முடியும்" என, கைவிரித்துள்ளார்.
மாணவ, மாணவியர், ஆவேசமடைந்து, கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டனர். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று காலை, 10 மணியளவில், வகுப்பை புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயில் பகுதிக்கு திரண்டனர். கல்லூரி அருகே, ரவுண்டானா பகுதியில், ரோட்டில் அமர்ந்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, சேலம் உதவி எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், செல்வராஜ், எஸ்.ஐ., கருணாநிதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மறியல் ஈடுபட்டவர்களுடன், பேச்சுவார்த்தை நடந்தது. லேப்டாப் வழங்குவதாக உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக, மாணவ, மாணவியர் ஒருசேர தெரிவித்ததால், பிரச்னை வலுத்தது. மாணவ, மாணவியரின், இந்த திடீர் மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதை தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில், "கலெக்டரை சந்தித்து மனுகொடுங்கள். அவர்கள் மூலம், உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என, தெரிவிக்கப்பட்டது. அதையேற்று, மாணவ, மாணவியர் மறியலை கைவிட்டனர்.
அதையடுத்து, மாணவ, மாணவியர் ஒருசேர கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு, இலவச லேப்டாப் கேட்டு, டி.ஆர்.ஒ., பிரசன்னவெங்கடேசன் வசம் மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
