தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கை விவகாரம்:ஆசிரியர் கல்வி பல்கலை உத்தரவு ரத்து

மாணவர் சேர்க்கை விவகாரம்:ஆசிரியர் கல்வி பல்கலை உத்தரவு ரத்து

மாணவர் சேர்க்கை விவகாரம்:ஆசிரியர் கல்வி பல்கலை உத்தரவு ரத்து


UPDATED : பிப் 03, 2013 12:00 AM

ADDED : பிப் 03, 2013 06:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2013 12:00 AM ADDED : பிப் 03, 2013 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2009ம் ஆண்டு, கொண்டு வந்த விதிமுறைகளின் படி, ஆசிரியர் கல்லூரிகள், தேசிய தர மதிப்பீட்டு ஆய்வுக் குழுவிடமிருந்து, தர மதிப்பீட்டுச் சான்றிதழை, 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், பெற வேண்டும்.

அவ்வாறு பெறவில்லை என்றால், அந்தக் கல்லூரிகள், பி.எட்., படிப்பில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை மற்றும் எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கையை, 2012-13ம் ஆண்டில், நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. தர மதிப்பீடு சான்றிதழ் பெற, தேசிய தர மதிப்பீட்டு ஆய்வுக் குழுவுக்கு, ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற முடியாத, 14 ஆசிரியர் கல்லூரிகள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அங்கீகாரத்தை, நாங்கள் பெற்றுள்ளோம். தேசிய தர மதிப்பீட்டு ஆய்வுக் கவுன்சிலின், ஆன்-லைன் முறை, கடந்த ஆண்டு, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை செயல்படவில்லை. எனவே, தர மதிப்பீட்டு சான்றிதழ் கோரி, எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை.

எங்கள் கல்லூரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், கடிதங்களை அனுப்பியுள்ளது. அதில், "2012ம் ஆண்டு, ஏப்ரல், 1ம் தேதிக்கு முன், தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறத் தவறியதால், பி.எட்., படிப்பில் கூடுதலாக மாணவர் சேர்க்கையையும், எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கையையும், 2012-13ம் ஆண்டில் மேற்கொள்ளக் கூடாது" என உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

கல்லூரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆர்.சுரேஷ்குமார், ரபு மனோகர், உதயகுமார், உள்ளிட்டோர், "தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற முடியாமல் போனதற்கு, கல்லூரிகள் காரணமல்ல. ஆய்வுக் குழுவின், ஆன்-லைன் முறை செயல்படாததால் தான், எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை" என, வாதாடினர்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:தேசிய தர மதிப்பீட்டு ஆய்வுக்குழு தாக்கல் செய்த பதில் மனுவில், "ஆன்-லைன் முறை, கடந்த ஆண்டு, ஜனவரி முதல் செயல்படவில்லை" என, தெரிவித்துள்ளது.

"ஆய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ள கல்லூரிகளுக்கு, அங்கீகாரம் வாபஸ் பெற மாட்டோம்" என, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் முடிவு எடுத்துள்ளது. அதே சலுகையை, மனுதாரர்களுக்கும் வழங்க வேண்டும்.

தர மதிப்பீட்டுச் சான்றிதழை, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், பெறவில்லை என்கிற காரணத்திற்காக, ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்தக் கல்லூரிகளில், போதிய ஆசிரியர்கள் இல்லை என்றோ, வேறு எந்த குறைபாடுகளும் இருக்கிறது என்றோ, குற்றம் சாட்டப்படவில்லை. எனவே, அங்கீகாரம் உள்ள இந்தக் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, பல்கலைக் கழகம் உத்தரவிட்டது சரியல்ல. தர மதிப்பீட்டுச் சான்றிதழைப் பெற முடியாமல் போனதற்கு, மனுதாரர்கள் மீது குற்றம் காண முடியாது.

ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களின் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, மூன்று வாரங்களுக்குள் பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us