ஒரே இணையதள முகவரி: மாணவர்கள் விவரம் பதிவதில் தாமதம்
ஒரே இணையதள முகவரி: மாணவர்கள் விவரம் பதிவதில் தாமதம்
UPDATED : பிப் 09, 2013 12:00 AM
ADDED : பிப் 09, 2013 08:23 AM
அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விவரங்களை உள்ளடக்கிய, கல்வி நிர்வாகத் தகவல் கட்டமைப்பு எனும் முறையை உருவாக்கி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் வகுப்புகள் வாரியாக பெயர், முகவரி, பெற்றோரின் தொழில், வருமானம் போன்ற விவரங்களை கல்வித்துறை பிரத்யேக இணையதள முகவரியில் பதிய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதியின்றி தனியார் கம்ப்யூட்டர் மையங்களை அணுக வேண்டி உள்ளதால் மாணவர்களிடம் தலா ரூ. 10 வசூலிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பணிக்கான காலக்கெடு, ஜன.,31 ல் முடிந்த நிலையில், மேலும், பிப்., 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் விவரங்களை பதிய, ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், காலதாமதம் ஏற்பட்டு ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "தனியார் கம்ப்யூட்டர் மையங்களை நாடும்போது, பணம் செலவாகிறது என்பதால் ஆசிரியர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்திற்கென குறித்த தேதி அல்லது தனித்தனி முகவரியை ஒதுக்கியிருக்க வேண்டும்.
பொதுத்தேர்வு நேரத்தில் விவரம் சேகரிப்பு பணியை, தலைமை ஆசிரியர்கள் கூடுதல் சுமையாக கருதுகின்றனர். பிப்., 15க்குள் முடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது" என்றார்.
