கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள்: அவதிப்படும் மாணவர்கள்
கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள்: அவதிப்படும் மாணவர்கள்
UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM
ADDED : ஜூலை 26, 2013 09:39 AM
ஏழை மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி பயில, வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டது. கல்விக் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை. அசலை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு கூறியது.
கல்விக் கடன், தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில், சிலர் கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, வடக்குத்து உட்பட, 10 ஊர்களில் உள்ள இந்தியன் வங்கிகளில், கல்விக் கடன் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு இந்தியன் வங்கியில், சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தில், பொறியியல் சீட் கிடைத்த, அப்பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவிக்கு, கல்விக் கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. முதல் ஆண்டு கட்டணத்தை, பிறர் உதவியுடன் செலுத்திய அந்த மாணவி, கடன் வாங்கி, கல்வியைத் தொடர நினைத்தார். ஒரு ஆண்டு முடிந்தும், இதுவரை கல்விக் கடன் கிடைக்கவில்லை. அவர், மேற்கொண்டு படிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி, இந்தியன் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்விக் கடன் வாங்குபவர்கள், திருப்பிச் செலுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதே நிலை தொடர்ந்தால், வங்கிகள் திவால் ஆகும் நிலை ஏற்படும்.
இதைத் தவிர்க்கவே, முதல் கட்டமாக, கல்விக் கடன் வசூலாகாத, கடலூர் மாவட்டத்திலுள்ள, 10 வங்கிகளில் கல்விக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம், கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெற்றே, கடன் வழங்குகிறோம்.
படித்து முடித்து வேலைக்குச் சென்று, அவர்களாகவே, கடனை திருப்பி செலுத்தினால் தான் உண்டு. கல்விக் கடன் பெற்றவர்கள், வேலைக்கு சென்று விட்டனரா என, கண்காணிப்பது சிரமம்.
கல்விக் கடன் வழங்கும் போதே, அசல் சான்றிதழ்களில், கடன் வாங்கிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் வேலைக்குச் செல்லும் போது, சான்றிதழிலுள்ள கடன் விவரத்தை அறிந்து, உரிய வங்கிக்கு, தகவல் தர வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால், கல்விக் கடனை, திரும்ப செலுத்துவது அதிகரிக்கும். இவ்வாறு, வங்கி அதிகாரி கூறினார்.
