UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 08:38 AM
மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடியும் நிலையில், கால்நடை மருத்துவப் படிப்பிற்கு, இதுவரை கலந்தாய்வு தேதி கூட முடிவு செய்ய முடியாமல், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என, பொதுவாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்குள் கால்நடை மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்துவிடும் என, நம்புகின்றனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், கடந்தாண்டு, ஒரத்தநாடு மற்றும் நெல்லையில், புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகளை துவங்கியது. இரண்டு கல்லூரிகளில், மொத்தம், 80 இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற, இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலிடம், பல்கலைக்கழகம் விண்ணப்பித்து இருந்தது.
இதற்கிடையே, கடந்தாண்டு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்தனர். இதையடுத்து, இந்திய கால்நடை மருத்துவ கவுன்சசில் குழு, கடந்த மே மாதம், புதிய கல்லூரிகளை பார்வையிட்டது. அப்போது, கால்நடை மருத்துவப் பல்கலை துணைவேந்தர் பிரபாகரன், துறை அமைச்சர் மற்றும் செயலருடன், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
துணைவேந்தர் பொறுப்பில் இருந்த பதிவாளருடன், புதிய கல்லூரிகளை, குழு பார்வையிட்டது. பின் அக்குழு, கால்நடை மருத்துவக் கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கை மீது, இதுவரை எந்தவொரு முடிவையும், கவுன்சில் அறிவிக்கவில்லை.
புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால், கால்நடை மருத்துவ கலந்தாய்வு நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் கூறியதாவது:
கால்நடை மருத்துவப் படிப்பில், மொத்தம், 200 இடங்கள் உள்ளன. கடந்தாண்டு துவங்கப்பட்ட புதிய கல்லூரிகளில் மொத்தம், 80 இடங்கள் உள்ளன. கால்நடை படிப்பில் உள்ள, 200 இடங்களுக்கு மட்டும் தனியாக கலந்தாய்வு நடத்தினால், ஆக., 5ம் தேதி நடக்க உள்ள, இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வுக்கு மாணவர்கள் செல்ல நேரிடும்.
எனவே, இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின், இந்த கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், கால்நடை கல்லூரிகளில் உள்ள, 200 மற்றும் 80 இடங்களுக்கு, தனித்தனியாக கலந்தாய்வு நடத்தினால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
எனவே, புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன், 280 இடங்களுக்கும் மொத்தமாக கலந்தாய்வு நடத்தப்படும். அங்கீகாரம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது; அங்கீகாரம் கிடைத்தவுடன் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு, பிரபாகரன் கூறினார்.
