குமரி புத்தக திருவிழாவில் விற்பனைரூ.1 கோடியை எட்டுகிறது: மாணவ, மாணவியர் ஆர்வம்
குமரி புத்தக திருவிழாவில் விற்பனைரூ.1 கோடியை எட்டுகிறது: மாணவ, மாணவியர் ஆர்வம்
UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 11:10 AM
நாகர்கோவில்: குமரி புத்தக திருவிழாவை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கண்டுகழித்து வரும் நிலையில் புத்தகங்களின் விற்பனை 1 கோடி ரூபாயை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது.
கன்னியாகுமரி புத்தக திருவிழா-2013 என்ற பெயரில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா சார்பில் புத்தக கண்காட்சி நடந்துவருகிறது. கடந்த 19ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி நாளையுடன் முடிவடைகிறது.
கண்காட்சி 8 நாட்கள் ஆனநிலையில் ஆர்வமுடன் இளைஞர்கள், முதியோர்கள், மாணவ, மாணவியர்கள் என்று அனைத்து தரப்பினரும் புத்தக திருவிழாவிற்கு ஆர்வத்துடன் வந்தவண்ணம் உள்ளனர். காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடந்து வருகிறது. இவற்றில் சிறப்பம்சமாக மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு பிரபல எழுத்தாளர், கவிஞர்கள், பேச்சாளர்கள், படைப்பாளிகளின் சொல் அரங்கமும் நடந்து வருகிறது.
தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் புத்தக கண்காட்சியை பார்த்து செல்கின்றனர். இதனால் நேற்று வரை 90 ஆயிரம் பேருக்கு மேல் கண்காட்சியை பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதைப்போல் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் போட்டிபோட்டு புத்தகத்தை வாங்கி வருவதால் கடந்த 8 நாட்களில் மட்டும் ஏராளமான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ரூ.1 கோடி ரூபாய் வரைக்கும் ஸ்டால்கள் மூலம் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றுடன் சேர்த்து இரண்டு நாட்கள் மட்டுமே புத்தக கண்காட்சி நடைபெறுவதாலும், சனி, ஞாயிறான விடுமுறை நாளாக உள்ளதாலும் கடைசி கட்ட விற்பனையும், பார்வையாளர்களும் அதிகரிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு கேப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளும், உவரி கலைமாமணி அந்தோணியார் கலைக்குழுவினரின் களியலாட்டமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை, நாஞ்சில் சம்பத் பங்கேற்கும் சொல் அரங்கம் நடக்கிறது.
நிறைவு நாளான நாளை மாலை 4 மணிக்கு குமரி நடனப்பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சியும், கலை வளர்மணி மம்சாபுரம் உமாராணி குழுவினரின் தப்பாட்டமும் நடக்கிறது. 6 மணிக்கு நிறைவுவிழா நடக்கிறது.
