அலிகார் பல்கலை மாணவியர் உடை கட்டுப்பாட்டு விதிகள் தளர்வு
அலிகார் பல்கலை மாணவியர் உடை கட்டுப்பாட்டு விதிகள் தளர்வு
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 08:36 AM
உ.பி., மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலை நிர்வாகம், தங்கள் விடுதிகளில் தங்கியுள்ள மாணவியருக்கு, உடை உள்ளிட்ட சில விஷயங்களில் கட்டுப்பாடுகளை விதித்தது. "விடுதியில் தங்கியுள்ள மாணவியர், நாகரிகமாக தோற்றமளிக்கும், துப்பட்டாவுடன் கூடிய, சல்வார் கமீஸ் உள்ளிட்ட உடைகளை மட்டுமே அணிய வேண்டும்.
ஒரு மாணவியிடம், ஒரு மொபைல் போன் மட்டுமே இருக்க வேண்டும். விடுதியை விட்டு வெளியில் செல்லும்போதும், உள்ளே வரும்போதும், அதற்கான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். விடுதியை விட்டு, வெளியில் சென்று, உணவருந்த கூடாது" போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
"இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும்" அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, பரவலாக கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து, பல்கலையின் மக்கள் தொடர்பு அதிகாரி, ரகத் அப்ரார் கூறியதாவது: பல்கலையில், பல விடுதிகள் உள்ளன. ஒரே ஒரு விடுதியில் மட்டுமே, உடைகளுக்கான கட்டுப்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது. அதுவும், மாணவியருக்கு ஆலோசனை வழங்கும் விதமாகவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது, அதிகாரப்பூர்வ முடிவு அல்ல.
தற்போது, உடைகள் விஷயத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள், வாபஸ் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ரகத் அப்ரார் கூறினார்.
