ஆபாச பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வேதனைக்குரியது: டி.ஐ.ஜி., ஆதங்கம்
ஆபாச பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வேதனைக்குரியது: டி.ஐ.ஜி., ஆதங்கம்
UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM
ADDED : ஜூலை 29, 2013 10:52 AM
கரூர்: "கலை நிகழ்ச்சிகளில் ஆபாச பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் நடனம் ஆடுவது வேதனைக்குரியது," என சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. பாரி, கரூரில் நடந்த கல்வி நிதி வழங்கும் விழாவில் கூறினார்.
காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில், கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. விழாவில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் டி.ஐ.ஜி., பாரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
"நாம் அணிந்து கொள்ளும் உடைகளை தவிர, அனைத்தையும் தானம் கொடுக்க வேண்டும் என, புறநானுறு பாடல் சொல்கின்றன. மாணவர்களை உருவாக்கும் சமுதாயத்துக்கு, அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். தற்போது பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில், ஆபாசமான பாடல் வரிகளுக்கு மாணவ, மாணவிகள் நடனம் ஆடுவது வேதனைக்குரியது.
மனிதன் வெற்றி பெற்றால், அவனை உலகம் பார்க்கும். தோல்வியடைந்தால் அவன் உலகத்தை கற்றுக் கொள்வான்.மாணவர்கள் படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்றால், சொந்தமாக தொழில் துவக்க வேண்டும். முப்பது வயதுக்கு மேல் இரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பல்வேறு நோய்கள் வருகின்றன. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக அதிகரித்து வருகிறது." இவ்வாறு டி.ஐ.ஜி., பேசினார்.
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த, 25 மாணவ, மாணவிகளுக்கு டாக்டர், இன்ஜி., கால்நடை டாக்டர், வேளாண் போன்ற படிப்புகள் படிக்க, கல்வி, விடுதி, உணவுக்கட்டணம் முழுவதும் வழங்கப்பட்டது.
