மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவிபுரியும் "நாணயக்காரர்கள்"
மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவிபுரியும் "நாணயக்காரர்கள்"
UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM
ADDED : ஜூலை 29, 2013 11:01 AM
திருப்புவனம்: ஆராய்ச்சிக்கு உதவிபுரியும் வகையில், பழங்கால நாணயங்களை வைகை ஆற்றங்கரையில் தேடும் பணியில், கும்பகோணத்தை சேர்ந்த நாணயக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே அணைக்கரையை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன், 38. மனைவி தேன்மொழி, குழந்தை நந்தினி, மாமனார், மாமியாருடன் திருப்புவனம் மடப்புரத்தில் தங்கி உள்ளனர். விவசாய கூலிகளான இவர்கள் வேலைவாய்ப்பில்லாத காலங்களில், ஆற்றங்கரையில் பழங்கால நாணயங்களை வயிற்று பிழைப்புக்காக தேடுவது வழக்கம்.
வாழ்வாதாரத்திற்காக ஆண்டுக்கு ஒருமுறை காவிரி, வைகை ஆற்றை நாடி வருகின்றனர். ஆற்றில் யாருக்கும் பாதிப்பின்றி மணலுக்குள் நாணயங்களை தேடுகின்றனர். இவர்கள், "மணல் சலிப்பு" எனும் முறையில் கொஞ்சமும் சளைக்காமல், சிறு இரும்பு துண்டை கையில் வைத்து மணலை கிளறி, கிளறி நாணயங்களை தேடுகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நம்பிக்கையோடு தேடுகின்றனர்.
கிடைக்கும் நாணயங்களை விற்று, கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவி புரிகின்றனர். இதில், கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்துகின்றனர்.
மணிகண்டன் கூறுகையில், "ஒருவர் வாழ்ந்த வரலாறு, ஆண்டவர், மாண்டவர் விபரங்கள், நாணயம் மூலம் வெளிப்படுகிறது. நாணய சேகரிப்பாளர்களுக்கு, அரிதான நாணயங்களை ஆற்றில் தேடி தருகிறோம். இதில், கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறோம். எங்களது வாழ்க்கை, ஆறு போல் வறண்டு கிடந்தாலும், வாழ்வளிக்கும் என்ற நம்பிக்கையில், வைகை, காவிரி போன்ற ஆற்றுகளில் பழங்கால நாணயங்களை தேடுகிறோம்," என்றார்.
