பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு துவங்கியது
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு துவங்கியது
UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:31 AM
சென்னை: பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அத்தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வு அடிப்படையில், மூன்று பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
காலாண்டு தேர்வுக்கு முன், முதல் பருவ தேர்வு; அரையாண்டு தேர்வுக்கு முன், இரண்டாம் பருவ தேர்வு; முழு ஆண்டு தேர்வுக்கு முன், மூன்றாவது பருவ தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், முதல் பருவ தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது.
ஜூன், ஜூலை ஆகிய, இரு மாதங்களில் நடந்து முடிந்த பாடங்களில் இருந்து, இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வு, மாவட்ட அளவில், பொதுத் தேர்வாக நடக்கிறது. எனினும், மாநில அளவில், நேற்று துவங்கியுள்ள இத்தேர்வு, ஆக., 2ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை மாவட்டத்திலும், இந்த தேர்வுகள், நேற்று துவங்கின. தினமும், காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரை, ஒரு தேர்வும்; பிற்பகலில், 2:30 மணி முதல், 4:00 மணி வரை, வேறொரு பாடத்திற்கான தேர்வும் நடக்கின்றன.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "பொதுத்தேர்வு குறித்து, மாணவர்களிடையே உள்ள பயத்தை போக்கவும், இது வரை நடந்த பாடங்களில் இருந்து, தேர்வு நடத்துவதன் மூலம், பாட கருத்துக்கள், மாணவர்கள் மனதில், நன்றாக பதியவும், இந்த பருவ தேர்வுகள், ஒரு வாய்ப்பாக உள்ளன" என்றார்.
