தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.எஸ்., சேர்க்கைக்கு அனுமதி
தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.எஸ்., சேர்க்கைக்கு அனுமதி
UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:33 AM
சென்னை: ஐகோர்ட் உத்தரவையடுத்து, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், முதுகலை பல் மருத்துவப் படிப்பான எம்.டி.எஸ்.,சில், மாணவர் சேர்க்கைக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
எம்.டி.எஸ்., படிப்புக்கு, பி.டி.எஸ்., பட்டப் படிப்பில், மாணவர் பெற்ற மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வு ஆகியவற்றில் ஏதோ ஒன்றின் அடிப்படையிலோ அல்லது இரண்டின் அடிப்படையிலோ, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றனர்.
நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம், பொது நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதி அடிப்படையிலான, "ரேங்க்" பட்டியலை வெளியிட்டது.
ஆனால், பல தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள், இம்முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை.
இதனால், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, முதுகலை பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என காத்திருந்த மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், வெளிப்படையாக இல்லாமல் மாணவர் சேர்க்கையை நடத்தியதாக குற்றச்சாட்டுஎழுந்தது.
இதையடுத்து, "மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள, ரேங்க் பட்டியல், அடிப்படையில் தான், முதுகலை மருத்துவப் படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பிற முறைகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கு, தடைவிதிக்க வேண்டும் என, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழக சட்டப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர், டாக்டர் முரளி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், "பல் மருத்துவ கவுன்சில் மற்றும் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான விதிமுறைகளை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி.எஸ்., படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்" என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, பல் மருத்துவ கவுன்சில், தனியார் கல்லூரிகளுக்கு, ஐகோர்ட், நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, "14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், முதுகலை பல் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கையை, பல் மருத்துவ சட்ட விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்" என, இந்திய பல் மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, 14 தனியார் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
