கேரள மாணவர்கள் கோவையில் மோதல்: 10 பேர் காயம்; 19 பேர் கைது
கேரள மாணவர்கள் கோவையில் மோதல்: 10 பேர் காயம்; 19 பேர் கைது
UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:34 AM
கோவை, சின்னவேடம்பட்டியில் உள்ள, சி.எம்.எஸ்., கல்லூரியில், தமிழக, கேரள மாணவர்கள், அதிக அளவில் தங்கி, படித்து வருகின்றனர். பி.எஸ்.சி.,மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவியிடம், எம்.ஐ.பி., முதலாம் ஆண்டு படிக்கும், நிகில், 21, என்பவர், பேச்சுக் கொடுத்தார்.
இதை, பி.பி.எம்., (சி.ஏ.,) படிக்கும், சுகையில், 19, தட்டிக் கேட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கல்லூரி வளாகத்துக்குள்ளேயே, மோதல் நடந்தது; கல்லூரி மாணவர்கள், சமாதானம் செய்து அனுப்பினர்.
நேற்று அதிகாலை, 6:30 மணி அளவில், சுகையில் மற்றும் மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு, கேரளாவில் இருந்து ரவுடிக் கும்பலுடன் வந்த நிகில், கத்தி, அரிவாள், கோடரி போன்ற பயங்கர ஆயுதங்களால், மாணவர்களை தாக்கினர்; ஜன்னலை உடைத்து நொறுக்கினர்.
சுகைல் மற்றும் நண்பர் அப்பாஸ் உள்ளிட்டோர், டீக்கடையில் இருந்ததால், அவர்களை தேடி சென்றனர். அங்கிருந்த மாணவர்களில் பலரை, "ஏர்-கன்" துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அப்பாசை தனியாக அழைத்துச் சென்று தாக்கினர். இந்தக் கொலை வெறித் தாக்குதலில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து, பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, கேரள ரவுடி கும்பல், அவர்கள் வந்திருந்த டெம்போ டிராவலர் வேனில் ஏறி தப்பியது. தகவல் அறிந்த போலீசார், சரவணம்பட்டி செக் போஸ்ட்டில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை மடக்கி, நிகில் உள்ளிட்ட, 19 பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்த ஏர்கன், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கும்பல், சிறையில் அடைக்கப்பட்டது.
ரவுடிகளின் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள், 10 பேரில், ஆறு பேர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
