பெற்றோர் வருமானத்துக்கு ஏற்ப பள்ளி கட்டணம்: பன்சால் கமிட்டி பரிந்துரை
பெற்றோர் வருமானத்துக்கு ஏற்ப பள்ளி கட்டணம்: பன்சால் கமிட்டி பரிந்துரை
UPDATED : ஜன 20, 2009 12:00 AM
ADDED : ஜன 20, 2009 12:45 PM
டில்லியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள், பள்ளிக் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தன. இதுபற்றி ஆய்வு செய்வதற்காக பன்சால் தலைமையில் ஒரு கமிட்டியை மாநில அரசு நியமித்தது.
இந்த கமிட்டி, சமீபத்தில் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது. அதில், ‘பெற்றோரின் வருமானத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் பள்ளிக் கட்டணத்தை வசூலிக்கலாம். இதற்காக, வருமானத்தின் அடிப்படையில் வெவ்வேறு பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிக்கலாம்.
அதிகமாக வருமானம் ஈட்டும் பெற்றோரிடம் இருந்து அதிக கட்டணமும், குறைந்த அளவு வருவாய் பெறும் பெற்றோரிடம் இருந்து குறைந்த அளவு கட்டணமும் வசூலிக்கலாம்’ என பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து டில்லி மாநில கல்வி அமைச்சர் அரவிந்தர் சிங் லவ்லி கூறியதாவது:
பன்சால் கமிட்டி அளித்துள்ள பரிந்துரையை ஆய்வு செய்து, அதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அங்கிருந்து அறிக்கை வந்தவுடன், பரிந்துரையை செயல்படுத்துவதற்கான முயற்சி மேற் கொள்ளப்படும்.
டில்லியில் 80 சதவீத பெற்றோரால் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது. 20 சதவீத பெற்றோர் மட்டுமே கட்டண உயர்வை செலுத்தக் கூடிய திறன் பெற்றவர்களாக உள்ளனர். இவ்வாறு அரவிந்தர் சிங் லவ்லி கூறினார்.
