ஒரே நேரத்தில் நடைபெறும் 2 தேர்வுகளால் டாக்டர்கள் குழப்பம்
ஒரே நேரத்தில் நடைபெறும் 2 தேர்வுகளால் டாக்டர்கள் குழப்பம்
UPDATED : ஜன 21, 2009 12:00 AM
ADDED : ஜன 21, 2009 01:15 PM
சென்னை:
டாக்டர்கள் பணி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வும், ‘ஜிப்மர்’ முதுகலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால், டாக்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பை ஐந்தரை ஆண்டுகள் படித்து முடித்தாலும், எம்.டி., எம்.எஸ்., போன்ற உயர் படிப்பைப் படித்தால் தான் டாக்டர்கள் சமுதாயத்தில் கவுரவமாக செயல்பட முடியும் நிலை தற்போது உள்ளது. எனவே, எப்படியாவது உயர்படிப்பில் சேர்ந்துவிட இளம் டாக்டர்கள் தவம் கிடக்கின்றனர்.
அதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற கடுமையாக படிக்கின்றனர். இந்த ஆண்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்., - எம்.டி., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, பிப்ரவரி 15ம் தேதி நடைபெறுமென முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
புதுச்சேரியில் நடத்தப்படும் இத்தேர்வில், மத்திய அரசு மருத்துவக் கல்லூரி என்பதால் நியாயமான முறையில் தேர்ந்தெடுப்பர் என்ற நம்பிக்கையில், ஏராளமான டாக்டர்கள் இதில் பங்குகொள்ள விரும்புகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 700க்கும் மேற்பட்ட டாக்டர்களைத் தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி., சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது. இப்பணியில் சேர்ந்தால், பணியில் உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் உயர்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, வேலை கிடைப்பதுடன், உயர்படிப்புக்கான வாய்ப்பும் கிடைப்பதால், இந்தத் தேர்வை எழுதவும் டாக்டர்கள் தயாராகி இருந்தனர். ஆனால், இந்தத் தேர்வும் அதே பிப்ரவரி 15ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளிலும் பங்கு பெற விரும்பிய டாக்டர்களுக்கு, இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜிப்மர்’ நுழைவுத் தேர்வில் பல மாநிலத்தவரும் பங்குகொள்வர் என்பதால் தான், அதற்கான தேதி முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது டி.என்.பி.எஸ்.சி., நடத்தவுள்ள தேர்வை தள்ளிவைத்தால், அனைத்து இளம் டாக்டர்களுக்கும் ஜிப்மர் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்கும்; எதைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ள டாக்டர்கள் தெளிவடைவர்.
