பள்ளிகளுக்கு அங்கீகாரம்: சிக்கல்களை தீர்க்க தனி குழு
பள்ளிகளுக்கு அங்கீகாரம்: சிக்கல்களை தீர்க்க தனி குழு
UPDATED : ஜன 21, 2009 12:00 AM
ADDED : ஜன 21, 2009 01:18 PM
சென்னை:
பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரத்தை பெறும் போதும், புதுப்பிக்கும்போதும் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்துவது குறித்து, பரிந்துரைக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் குற்றாலிங்கம் கூறியிருப்பதாவது:
அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் துவக்க அங்கீகாரம் பெறும் போதும், அங்கீகாரம் புதுப்பிக்கும் போதும், பள்ளிக் கல்வித் துறை அல்லாத பிற துறைகளிடம் இருந்து தடையின்மைச் சான்று பெற வேண்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம், கட்டட உரிமம், கட்டட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறை தடையின்மைச் சான்று, சுகாதாரத் துறைச் சான்று ஆகியவற்றை பெறுவதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால், அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகி, பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் செல்லும் போது பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாத நிலை உருவாகிறது. எனவே, பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு அரசுக்கு பள்ளி நிர்வாகங்கள் கோரிக்கை அனுப்பி வருகின்றன.
ஆரம்ப அங்கீகாரம் பெறும் போதும், தொடர் அங்கீகாரம் பெறும் போதும் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்துவது குறித்த வழிகளை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.பி.,விஜயகுமாரை தலைவராகக் கொண்டு, ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெகநாதன், பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உறுப்பினர்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குனர் பிச்சை உறுப்பினர் செயலராகவும் இந்த உயர்மட்டக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு, இதுபற்றி பரிசீலித்து மாணவர் பாதுகாப்பு, பள்ளி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும். இவ்வாறு குற்றாலிங்கம் தெரிவித்துள்ளார்.
