UPDATED : ஜன 22, 2009 12:00 AM
ADDED : ஜன 22, 2009 06:15 PM
பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றியமைக்கும் வரை, இந்தப் பிரிவுகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது’ என, தமிழக அரசுக்கு உயர்நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தொழிற் கல்வி படிப்புகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த பாடத் திட்டங்கள், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் இல்லை.
இதனால், தொழிற் கல்வி படிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தீவிர ஆய்வுக்குப்பின், தமிழக அரசிடம் பரிந்துரை அறிக் கையை சமர்ப்பித்துள்ளது.
குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய தேவையின் அடிப்படையில், தொழிற்கல்வி பாடத்திட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும். செயல்முறை பயிற்சி அடங்கியதாக பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். இரண்டு பாடங்கள் செயல்முறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியதாக வடிவமைக்க வேண்டும்.
அலுவலக மேலாண்மை, வர்த்தக மேலாண்மை பாடங்களைப் பொதுவான குரூப்பில் சேர்க்கலாம். வங்கி, இன்சூரன்ஸ் தணிக்கை செய்முறைத் தேர்வுகளை, வங்கிகள், இன்சூரன்ஸ் ஏஜென்சிஸ் அல்லது தணிக்கை நிறுவனங்கள் மூலமாகச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடத்திட்ட மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக, பள்ளி வளாகத்தில் பயிற்சி மையத்தை அமைப்பதற்கு தொழில் துறையினர் முன்வர வேண்டும். ஒரு பள்ளியில் அமைக்கப்படும் பயிற்சி மையத்தை, இரண்டு, மூன்று பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐ.டி.ஐ., - பாலிடெக்னிக், வேளாண் பல்கலைக்கழகங்களின் களப்பயிற்சி மையங்கள், சமுதாயக் கல்லுõரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் செயல்முறை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பாடப் பிரிவுகள் அல்லது 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடப் பிரிவுகளை நீக்க வேண்டும். பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கும் வரை, புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது. இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, பரிந்துரைகளை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு உத்தரவிட்டிருப்பதை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலர் ஜனார்த்தனன் கூறுகையில், “புதிய பாடத் திட்டம் குறித்த அறிவிப்புகள் மே மாதம் வெளிவரும் என்றும், அடுத்த கல்வியாண்டில் புதிய பாடத் திட்டங்கள் அமலுக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கிறோம். பொதுக் கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு இணையாக தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
