UPDATED : ஜன 22, 2009 12:00 AM
ADDED : ஜன 22, 2009 04:34 PM
சென்னை: ‘வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை பராமரித்து வரும் மனுதாரர்களின் விவரங்களை மாதந்தோறும், தேசிய தகவல் மையம் மூலம் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று வேலைவாய்ப்புத் துறை ஆணையர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவரத்தினம், சென்னை, சாந்தோம் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன. 21ம் தேதி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் முதுகலை பட்டதாரிகள், தொழில் கல்வி பயின்றோருக்கு ஏற்படும் செலவு மற்றும் கால விரயத்தைத் தவிர்க்க, துரையை தலைமையிடமாகக் கொண்டு தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை அலுவலக எல்லைக்குள், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர் கோவில், புதுக்கோட்டை, கரூர், ரோடு, நாமக்கல், கோவை, உதகை என 15 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதர மாவட்டங்கள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குள் வருகின்றன. மதுரை எல்லைக்குட்பட்ட 1.95 லட்சம் பதிவுதாரர்களின் விவரங்கள், அந்த அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பதிவுதாரர்கள் புதிய பதிவு, புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு சென்னை வரவேண்டியதில்லை.
இத்துறையின் இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பித்ததற்காக, இணையதளத்தில் இருந்து பதிலும் அச்சிட்ட பிரதியும் பெற்றுக்கொள்ளலாம். அந்த பதிலில், புதுப்பிக்கப்பட்ட விவரத்துடன், பதிவு எண், பிறந்த தேதி, புதுப்பிக்கப்பட்ட நாள், அடுத்து புதுப்பிக்க வேண்டிய நாள் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும். பதிவை புதுப்பிக்க கெடு மாதம் மற்றும் அடுத்து வரும் இரண்டு மாத கால அவகாசம் உண்டு. இந்த அவகாசத்தை கடந்தவர்கள், இணையதளம் மூலம் புதுப்பிக்க இயலாது.
அவர்கள் நேரில் அல்லது தபால் மூலம் தொடர்புகொண்டால், அரசு உத்தரவுப்படி, கருணை அடிப்படையில் ஒரு முறை மட்டும் 18 மாத அவகாசத்தை பயன்படுத்தி புதுப்பிக்கப்படும். வேலைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
முதுகலை பட்டதாரி மற்றும் தொழில் கல்வி பயின்று, வேலைக்காக பதிவு செய்து ஐந்து ஆண்டுகளாக காத்திருப்பவர்கள் அந்தந்த உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பு உதவித் தொகை பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 12ம் தேதி வரை உள்ள மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 91 பேருக்கு 60 கோடி ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மதுரை கிளை மற்றும் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பதிவை பராமரித்து வருவோரின் விவரங்களை மாதந்தோறும், தேசிய தகவல் மையம் மூலம் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இணையதளத்தின் மூலம் புதுப்பிப்பவர்கள் பெயர் விடுபட்டிருக்குமோ என அஞ்ச வேண்டாம். இன்றைய தேதி வரை, இணையதளம் மூலம் புதுப்பித்தவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஜீவரத்தினம் தெரிவித்தார்.
