ஆசிரியர் பயிற்சி பள்ளி ஊழியர் நியமனம்: ஐகோர்ட் நூதன நிபந்தனை
ஆசிரியர் பயிற்சி பள்ளி ஊழியர் நியமனம்: ஐகோர்ட் நூதன நிபந்தனை
UPDATED : ஜன 22, 2009 12:00 AM
ADDED : ஜன 22, 2009 04:38 PM
சென்னை: ‘காது கேளாதோர், பார்வையற்றோர் பள்ளிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கும் பட்சத்தில், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் பணியாளர்கள் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள வெங்கடகுளத்தில், புனித சேவியர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உள்ளது. கூடுதலாக 50 மாணவர்களைச் சேர்க்க, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அனுமதி வழங்கியது. கடந்த 2006-07ம் ஆண்டில், 100 மாணவர்கள் இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
கூடுதலாக 50 மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன், பள்ளியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பட்டியலுக்கு அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை.
இது தொடர்பாக ஐகோர்ட்டில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. ஆசிரியர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அரசு உத்தரவு பிறப்பிக்காததால், கோர்ட் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஆசிரியர்கள் பட்டியலை ஆசிரியர் கல்வி இயக்குனரகம் நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட், மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது. அதே நேரத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட கூடுதல் மாணவர்களை தேர்வு எழுதவும் அனுமதித்தது.
கடந்த ஜூன் மாதம், ஆசிரியர் பட்டியலை மீண்டும் நிராகரித்து இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கவும் கோரி, ஐகோர்ட்டில் புனித சேவியர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி சார்பில் வக்கீல் ஆர்.சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சுரேஷ்குமார், அரசு தரப்பில் வக்கீல் தாட்சாயிணி ரெட்டி ஆஜராகினர். ‘ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் விதிமுறைகளை, ஊழியர்கள் பட்டியல் பூர்த்தி செய்யவில்லை. தேவையான தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்கவில்லை. எனவே, பட்டியல் நிராகரிக்கப் பட்டது’ என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
கவுன்சில் விதிமுறைகளை மனுதாரர் பூர்த்தி செய்யவில் லையென்றால், கூடுதலாக சேர்க் கப்பட்ட மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து, பட் டமும் வழங்க அரசு அனுமதித்ததற்கு எந்த காரணமும் இல்லை. அப்படியிருக்கும் போது, 2006-07ம் ஆண்டுக்கு மட்டும் ஏன் ஒரு வேறுபட்ட நிலையை அரசு எடுக்க வேண்டுமென புரியவில்லை.
அரசின் குழப்பமான நிலையால், 2006-07ம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே தற்போது பிரச்னையில் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்க இயக் குனரகத்துக்கு உத்தரவிடுகிறேன். ஆனால், மனுதாரரின் தவறுக்காக வழக்கு செலவுத் தொகை விதிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் நியமனத்துக்கு இயக்குனரகம் ஒப்புதல் அளிக் காத பட்சத்தில், கூடுதலாக மாணவர்களை பள்ளி நிர்வாகம் சேர்த்தது தவறு. மாணவர்களின் எதிர்காலத்தை இந்த கோர்ட் கருதுவதால், இப்பிரச்னையை கருணையோடு அணுகுகிறோம்.
ஆசிரியர்கள் பட்டியலை நிராகரித்த ஆசிரியர் கல்வி இயக்குனரகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2006- 07ம் ஆண்டுக்கான ஊழியர்கள் பட்டியலுக்கு, கீழ்க் கண்ட நிபந்தனைகளின்படி அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர் துறை கமிஷனரின் பெயருக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான டி.டி.,யை மனுதாரர் அனுப்ப வேண்டும்.
இந்தப் பணத்தை, புதுக் கோட்டையில் உள்ள காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள செலவிட வேண் டும். பணத்தை செலவு செய்து, அதுகுறித்த அறிக்கையை கோர்ட்டுக்கு அரசு தாக்கல் செய்ய வேண்டும். நிபந்தனையை மனுதாரர் பூர்த்தி செய்யும் பட்சத்தில், 2006-07ம் ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக் குரிய தேர்வு முடிவுகளை இயக் குனரகம் வெளியிட வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்றால், இந்த ரிட் மனு தானாக டிஸ்மிஸ் ஆகி விடும். அரசு பிறப்பித்த உத்தரவும் உறுதியாகி விடும். இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
